Tuesday, November 16, 2010

இல்லாள்

மெல்ல மெல்ல பக்கம் வந்து
குட்டி குட்டி கண்கள் கொண்டு
திறந்து மூடி நெஞ்சைக் கொய்து
சிறையில் வைக்கிறாய்.


பூத்திராத சின்ன மொட்டு
இதழில் நீரைக் கொஞ்சம் வைத்து
உறங்கும் போதும் உலவும் போதும்
விருந்து வைக்கிறாய்.


பதறி விரைந்து சமைக்கும் நேரம் - உன்
கலைந்த ஓரக் கூந்தல் ஈரம் - என்
இதயத் துடிப்பை நிறுத்திச் செல்லும்.


நீ அமைதியாக உறங்கும் நேரம்
அதிகாலை சற்றே விழித்த நேரம்
உன் ஈரக் கூந்தல் உலரும் நேரம்
என் எண்ண ஓட்டம் மின்னல் வேகம்..




கொஞ்சிப் பேசி கெஞ்சும் போதும்
மழலை சிரிப்பில் மயக்கும் போதும்
அக்கு வேராய் ஆணி வேராய்
என்னைக் கொல்கிறாய்!!

Wednesday, January 27, 2010

மோட்ச வாசல்




மனதோடு மனது
கலக்கின்ற பொழுது
மயக்கங்கள் தருகின்றது.

இதயத்தின் வலிகள்
உன் இதழ் பொழியும் அன்பில்
இதமாகத் தணிகின்றது.

உனை மார்போடு தழுவத் துடிக்கின்ற கரங்கள் -
நாணத்தை விடுத்து புதுத்தேடல் கொள்ளும்
கண் பேசும் பரிபாஷை முடிகின்ற இரவில் -
கண் தவிர மற்றவை தான் விளையாடிடும்.



காமத்தின் முடிவில்
என் நெஞ்சோடு நீ உறங்கும்
தருணங்கள் சுகமானது.

மோட்சத்தின் வாசல்
சேர்கின்ற பொழுது
நம் கண்கள் மழை பொழியுது !!