Thursday, May 14, 2009

பேரின்பம்


சிந்திடும் வியர்வைத் துளி - உனக்கு
நம்பிக்கை வளர்த்திடும் பள்ளி - வாழ்க்கை
உழைக்க உழைக்க கொள்ளை அழகடா!

இதை எண்ணிய வேளையில் நீயும்
கதை கட்டிடும் வேலையை விட்டு
சதை தேய்ந்திட மேம்பட உழைப்பாயடா!

தூற்றுவோர் தூற்றலில் என்றும்
சாக்கடை நாற்றமே மிஞ்சும்
இதை கருத்திலே என்றுமே எண்ணிக் கொள்ளடா!

உழைப்பிலே கண்ணியம் கொண்டு
காதலாய் தொழிலையும் கண்டு
வாழ்ந்திடும் வாழ்க்கையில் உண்டு பேரின்பமடா!!

Thursday, May 7, 2009

குருநிலை


இயற்கை இவ்வுலகில் சொல்லும் விஷயங்கள்
நாளும் நம்வாழ்வில் கற்கும் பாடங்கள்
வாழ்கை மலர்மஞ்சம் மூடன் பக்கத்தில்
நாளும் புதுஅனுபவம் ஏகன் பக்கத்தில்



கல்லுக்குள் மறைந்திருக்கும் சிற்பங்கள் யாவும்
வலி தாங்கி உருமாறி புகழ்மாலை சூடும்
கொதிக்கின்ற ரத்தத்தின் வெப்பத்தில் விதியும்
எதிர்நோக்கி அடிவைக்க நம்பக்கம் வளையும்
அடிவாங்கி வலிதாங்கும் உலகின்பொருள் யாவும்
மின்னாமல் வெல்லாமல் கனவிலும் நிகழ்ந்திடுமோ?

வீரத்திருமகனே!
நீ தோல்விக்கு அஞ்சாமல்
உன் வேள்வியை முடிக்காதே
நீ வேதனை தாங்காமல்
இங்கு சாதனை கிடையாதே!!

Friday, May 1, 2009

நெஞ்சமெல்லாம்..


வற்றாத வார்த்தை இருந்தும் பற்றாதே என் சுவட்டில்


கல்லாத பாடம் ஒன்று நெஞ்சோடு மனக்கூட்டில்


எவ்வாறு நானும் முயல உன்னை புரிய வைக்க


காட்டாற்று வெள்ளத்தில் உயிர் சிக்கி பரிதவிக்க


துடிக்கும் இதயம் மறந்தேன் - திமிரிழன்தேன்.



இதயம் இரண்டும் மொழியும் பொழுது உயிர்கள் கலக்கும்


இதை வார்த்தையால் பரிமாற நினைக்க தேகம் வெடிக்கும்



உயிரோவியம் என் மனதுக்குள்ளே பலகாவியம் படைக்கும்


வெறும் கூற்றினால் வெளியில் சொன்னால் புனிதம் கெடுக்கும்


வழி காட்டி நீ வலி தருகிறாய்


புள்ளி கோலமாய் இணைகிறாய்!!